எட்டு மணிக்கு பாடசாலையின் முன் நுழைவாயில் கதவு பூட்டப்படுவதனால் காலதாமதமாகச் செல்கின்ற ஆண் ஆசிரியர்கள் மதிலேறிப் பாடசாலைக்குள் சென்று கற்பித்தல் செயற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
இச் சம்பவம் வவுனியா வடக்குக் கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றுவருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சில ஆசிரியர்கள் பாடசாலைக்குக் காலதாமதமாகச் செல்கின்றமையினால் நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் மேற்கொள்ள முடியாத அதிபர் பாடசாலை முன் நுழைவாயிலை காலை 8 மணிக்குப் பூட்டுகின்றார்.
இதனால் ஆண் ஆசிரியர்கள் சிலர் மதிலேறி உள்நுழைவதாகவும் பெண் ஆசிரியைகள் திரும்பி வீடு செல்வதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி வந்தால் சிவப்புக்கோடு இடப்படவேண்டும். இது தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெறுமானால் அரை நாள் லீவு வழங்கப்பட வேண்டும். இதுவே கல்வி அமைச்சின் சுற்று நிருபம் ஆகும். இதனைவிடுத்து குறித்த அதிபர் நுழைவாயிலை மூடுவது தொடர்பாக ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்