கற்றாழை மூலிகையும் அழகும், ஆரோக்கியமும்

2012-07-05 13:27:10


  Share
 
 
 

டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன் (M.D(s) (India)


Botanical Name - Aloe vera
Family - Liliaceae
English Name - Aloe
Sinhala Name - Komarika

கற்றாழை, நீராரை, சிறுபின்னி, பற்பாடகம், வெள்ளறுகு, வல்லாரை, பெருங்கரந்தை, விஷ்ணுகாந்தி, சிவனார்வேம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளும் சர்வசார மூலிகை என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. கற்றாழை மூலிகையில் ஆனைக்கற்றாழை (ஒரு வகை நீண்ட கற்றாழை), எருமைக்கற்றாழை, காட்டுக்கற்றாழை, சிவப்புச் சோற்றுக்கற்றாழை, சிறுகற்றாழை, சீமைக்கற்றாழை, சோற்றுக்கற்றாழை( வெண்மையான உள்ளீடு உடைய கற்றாழை), பனங்கற்றாழை (பனந்தாழை), பிள்ளைக்கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை (காட்டுக்கற்றாழை), மரக்கற்றாழை, மலைக்கற்றாழை, செங்கற்றாழை என பல வகைகள் இருப்பதாக பண்டைய நூல்கள் எடுத்துரைக்கிறன.

பொதுவாக கற்றாழைகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியவை. இவை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகின்றன. பல பருவங்கள் வளரக் கூடிய குறுஞ்செடியான கற்றாழையானது, அடி அகன்றும், நுனி குறுகியதாகவும் காணப்படுவதுடன், இலைகள் தசைப்பற்றானவையாக இருக்கும். கற்றாழையின் விளிம்பில் கீழ்நோக்கிய முட்கள் காணப்படுவதோடு, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறம்கொண்ட மலர்கள் மஞ்சரிக்காம்பில் தோன்றும். இத்தாவரத்தில் அரிதாகவே விதைகள் காணப்படுவதுடன், வேருடன் கூடிய சிறிய பகுதியூடாகவே இனப் பரம்பல் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக கடற்கரையோரங்களில் இயற்கையாக வளரக்கூடிய இத்தாவரத்தில் காணப்படும் நுங்கு போன்ற சோற்றுப் பகுதி (Gel) மிகுந்த மருத்துவ பயன் உடையது. மேலும் வெண்மையான உள்ளீடு கொண்ட கற்றாழை வகை சோற்றுக் கற்றாழை எனப்படுகிறது. இத்தாவரத்தின் சோற்றுப் பகுதியானது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் தோலினைப் பாதுகாப்பதுடன், முகத்தைப் பராமரிக்கின்றன.

கற்றாழையை மிகப் பழங்காலம் தொட்டே மக்கள் அழகை மேம்படுத்தும் பொருட்டு பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்றும் அறிய முடிகிறது. தீயினால் ஏற்பட்ட புண்கள், நாட்சென்ற காயங்கள், வயிற்றுப் புண், வயிற்று எரிவு ஆகிய நோய்களை இக்கற்றாழையானது துரிதமாகவும், இலகுவாகவும் குணப்படுத்தக்கூடியது.

விஞ்ஞான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இம்மூலிகையானது, முற்காலத்தில் சித்தர்களால் காயகற்ப மூலைகையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு காயம் என்பது உடம்பையும், கற்பம் என்றால் உடற்கலங்களை அழிய விடாது உடலை என்றும் பேணிப் பாதுகாப்பது என்றும் பொருள் கொள்ள முடியும்.

இவ்வளவு சிறப்பு மிக்க இம்மூலிகையை உணவாக மட்டுமன்றி உப உணவாகவும் (Dietary suppliment), சிறு கைமருத்துவ முறையாகவும் பயன்படுத்துவதால் அழகிய, ஆரோக்கியமான வாழ்வைப் பெறமுடியும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கற்றாழையின் சோற்றுப் பகுதியானது, தீப்புண்கள், நாட்பட்ட காயங்கள் மீது ஒரு படலமாக படிந்து பாதுகாப்பதோடு, காயங்களை ஆற்றும் சிறப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள ஆலோக்டின் B என்னும் பொருள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதோடு, காயங்கள் விரைவில் ஆறுவதை துரிதப்படுத்துவதாக அவ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சோற்றுக் கற்றாழைக் கறி

தேவையான பொருட்கள்

கற்றாழை சோறு - தேவையான அளவு
தேங்காய் - சிறிய பாதி 
காய்ந்த மிளகாய் - 3
கடலைப் பருப்பு - 100 கிராம்
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - 4 நெட்டு
கொத்துமல்லிக் கீரை - 1 பிடி
பசு நெய் - 20 கிராம்
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி

செய்முறை

தேங்காயைத் துருவி, பெருஞ்சீரகம் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாகவும், தக்காளியை நீளவாக்கிலும் அரிந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை ஊற்றி கடலைப் பருப்பை நன்றாகப் பொரித்து எடுக்கவும். பின்னர் கடுகு மற்றும் மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கி, அத்துடன் தக்காளி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லிக் கீரை ஆகியவற்றைப் போட்டு வதக்கி, உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றைக் கரைத்து ஊற்றித் தாழிக்கவும். சோற்றுக் கற்றாழையின் சோற்றினை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஏழு தடவைகள் சுத்தமான நீரில் கழுவி, அத்துண்டுகளையும், பொரித்த கடலைப் பருப்பையும் போட்டு வேக விடவும். 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி, சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.

இதனால் உடல் குளிர்ச்சியடையும்; உஷ்ணம் குறையும்; பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய் குணப்படும். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் வாய்வகந்தியாகவும், கிருமி கொல்லியாகவும் செயற்படும். கடலைப்பருப்பில் புரதச் சத்து உள்ளது. வெங்காயம் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. கொத்துமல்லிக் கீரையில் உயிர்சத்து C யும், நெய்யில் உயிர்சத்து D யும் காணப்படுகிறது. கறிவேப்பிலை செரிப்பை உண்டாக்கும். தக்காளி எதிர் ஒட்சியேற்ற (Antioxidant) மூலிகையாகும். 



ஆரோக்கிய மென்பானமான கற்றாழை யூஸ்

தேவையான பொருட்கள்

சோற்றுக் கற்றாழை மடல் - 5
தயிர் - 1 லீற்றர்
தேசிக்காய் - 2
சீனி - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கற்றாழை மடல் விளிப்புகளில் இருபுறமும் உள்ள முட்களை நீக்கி, மேற் தோல் மற்றும் கீழ் தோல் ஆகியவற்றை நன்றாக சீவவும். அப்போது Gel போன்ற சோறு கிடைக்கும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஏழு தடவைகள் சுத்தமான நீரில் கழுவவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய கற்றாழைத் துண்டுகளோடு, எலிமிச்சை பழ ரசம், சீனி, தயிர், உப்பு ஆகியவற்றைப் போட்டு, நன்றாகக் கலக்கவும். பின்னர் Grinder இல் அடித்து, வடித்துப் பரிமாறலாம்.

இரசாயனக் கலப்பற்ற இம்மூலிகை மென்பானமானது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். மூல நோய்க்கும், வயிற்றுப் புண்ணுக்கும் சிறந்த பலனைக் கொடுக்கும். கற்றாழை யூஸ் மூலம் அழகையும் ஆரோக்கியத்தையும் நீண்ட காலத்திற்குப் பேணிப் பாதுக்காக்க முடியும். 

தொகுப்பு - உமா பிரகாஷ்

 

 


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video